தமிழகம் மற்றும் புதுவையில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இயல்பைவிட அதிக அளவில் மழை பெய்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் நகர்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழையைப் பொருத்தவரை கடந்த ஜூன் 1 முதல் இன்றுவரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழை அளவு 38 செ.மீ. இந்தக் காலக்கட்டத்தின் இயல்பு அளவு 33 செ.மீ. இது இயல்பைவிட 16 சதவீதம் அதிகம்.
ஜூன் 1 முதல் இன்றுவரையிலான காலகட்டத்தில் சென்னையில் பதிவான மழை அளவு 59 செ.மீ. இந்தக் காலக்கட்டத்தின் இயல்பு அளவு 42 செ.மீ. இது இயல்பைவிட 39 சதவீதம் அதிகம்.
செப்டம்பர் மாதத்தில் பதிவான மழை அளவு இயல்பான காலக்கட்டத்தைவிட அதிகம், செப் மாத காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழை அளவு 16 செ.மீ. இந்தக் காலக்கட்டத்தின் இயல்பு அளவு 10 செ.மீ. இது இயல்பைவிட 53 சதவீதம் அதிகம்.
செப் மாத காலகட்டத்தில் சென்னையில் பதிவான மழை அளவு 19 செ.மீ. இந்தக் காலக்கட்டத்தின் இயல்பு அளவு 10 செ.மீ. இது இயல்பைவிட 92 சதவீதம் அதிகம்.
வடகிழக்குபருவமழையைப் பொருத்தவரையில் தெற்காசிய நாடுகளுக்கான வடகிழக்கு பருவமழைக்கான முன்னறிவிப்பின்படி இந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் இந்த ஆண்டு பருவமழை இயல்பை ஒட்டி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது”.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.