தமிழகம்

அவரது தலைமைத்துவப் பண்புகளால் நாடு பலனடைகிறது: மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்தத் தலைவரான மன்மோகன் சிங், நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் நிதித்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். 2004-2009 மற்றும் 2009-2014 காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராகப் பதவி வகித்துள்ளார். சிறந்த பொருளாதார அறிஞராகவும் மன்மோகன் சிங் அறியப்படுகிறார். தற்போது, அவர் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.

மன்மோகன் சிங் இன்று (செப்.26) தனது 87-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றார். அவருக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள், பிரதமர் மோடி, பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மன்மோகன் சிங்குக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத்திலும் அரசியலிலும், அவரது தலைமைத்துவப் பண்புகளால், நமது நாடு தொடர்ந்து பலனடைந்து வருகிறது. இந்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அவர், இன்னும் பல்லாண்டுகள் சேவை புரிந்திட வேண்டும் எனும் எனது விழைவினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

          
SCROLL FOR NEXT