உயர் நீதிமன்றம்: கோப்புப்படம் 
தமிழகம்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன? - அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை

தமிழக அரசால் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, கடந்த ஜனவரி மாதம் இரண்டு நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் தனியார் நிறுவங்களின் விவரங்களை ஆராயும் வகையில் விதிகளை வகுக்கக் கோரி 'காஸ்கேட்' என்ற நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது

மேலும் 2015-ல் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்குபெற்ற தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராயாததால், பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகவும், அதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மனுவில் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உலக மூதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் தொழில்களாக மாறி உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் மூதலீட்டாளர் மாநாடு நடத்தி முடித்தது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (செப்.24) மீண்டும் நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள் உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்தில் எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் அதன் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்தும் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT