வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை வாக்காளர்களே மேற்கொள்ளும் சிறப்பு திட்டம் குறித்த அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆணையர் பிரகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதுகுறித்த சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு:
“இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, செப். 01 முதல் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை வாக்காளர்களே மேற்கொள்ளும் சிறப்பு திட்டம் (Electoral Verification Programme) குறித்த அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆணையர் பிரகாஷ், தலைமையில் இன்று (17.09.2019) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களில் திருத்தங்களை அவர்களே சிறப்பு செயலி மூலம் மெற்கொள்ளும் திட்டம் (Electoral Verification Programme) 01.09.2019 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு திட்டம் வருகின்ற 30.09.2019 வரை ஒரு செயல்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள அவர்களது பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் மற்றம் பாலினம் உள்ளிட்ட விவரங்களில் திருத்தங்களை அவர்களே மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக N.V.S.P.வாக்காளர் உதவி கைப்பேசி செயலி(Voter helpline Mobile app), 1950 அழைப்பு மையம் (மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு மட்டும்) ,வாக்காளர் உதவி மையத்தில் (Voter Facilitation centre) உள்ள வாக்காளர் பதிவு அலுவலகம் (Electoral Register Office) மற்றும் இ-சேவை மையம் ஆகியவற்றின் மூலம் வாக்காளர்கள் தனது வாக்காளர் புகைப்பட அடையாள எண்ணை உள்ளீடு (Input)) செய்து தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில், ஒன்றை கொண்டு திருத்த விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.
அவ்வாறு, வாக்காளர்களால் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மூலம் (B.L.O.)கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு திருத்தங்கள் சரிபார்க்கப்பட்டு 15.10.2019 அன்று வெளியிடப்படவிருக்கும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலில் (Integrated draft roll)வெளியிடப்படும்.
இதன்மூலம் வாக்காளர்கள் தங்களின் விவரங்களை தாமாகவே திருத்தங்கள் செய்து கொள்ள இந்த வாய்பினை பயன்படுத்தி கொள்ளுமாறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் கட்சியில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இச்சிறப்பு திட்டத்தின் செயலியை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ள அறிவுறுத்துமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆணையாளர் கோ.பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / இணை ஆணையாளர் ஆர்.லலிதா மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) பெருமாள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்”.
இவ்வாறு மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.