கோப்புப்படம் 
தமிழகம்

சில நிமிடங்களிலேயே முடிந்த பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு; பயணிகள் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான அவகாசம் இன்று தொடங்கியது. ஜனவரி 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) புறப்படுபவர்கள் இன்று முன்பதிவு செய்ததை அடுத்து, டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.

சென்னையில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கியப் பண்டிகைகளை சொந்த ஊரில் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், 2020-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி (செவ்வாய்) போகிப் பண்டிகையுடன் பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. அடுத்த நாள் 15-ம் தேதி (புதன்) பொங்கல், 16-ம் தேதி (வியாழன்) மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி (வெள்ளி) காணும் பொங்கல் என 4 நாட்கள் கொண்டாடப்படுகின்றன.

பொங்கலுக்கு முன்பு ஜனவரி 13-ம் தேதி திங்கள் மட்டுமே வேலை நாள். அதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஜனவரி 11-ம் தேதி சனிக்கிழமை தொடங்கி, 19-ம் தேதி ஞாயிறு வரை தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால், வெளியூர் செல்பவர்கள் அதற்கேற்ப பயணத் திட்டம் வகுத்து வருகின்றனர்.

இதனால் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய டிக்கெட் விற்பனை, சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் எழும்பூர் ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனை முடிந்துவிட்டதால், காத்திருந்த சிலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மேலும் பலர் ஜனவரி 13-ம் தேதி (திங்கள்) இரவு சொந்த ஊர் புறப்படுவார்கள் என்பதால், அன்றைக்கு முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகம் இருக்கும். இதற்கான முன்பதிவு வரும் 15-ம் தேதி தொடங்குகிறது.

செப்.21-ல் முன்பதிவு

இதேபோல, பொங்கல் பண்டிகை முடிந்து திரும்புபவர்கள் ஜனவரி 19-ம் (ஞாயிறு) பயணம் செய்ய வசதியாக செப்டம்பர் 21-ம் தேதியும் அதிக அளவில் மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவு ரயில்களுக்கான முன்பதிவு 120 நாட்களாக மாற்றப்பட்டுள்ளதால், பொங்கலுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT