ஆர்.டி.சிவசங்கர்
அழிவின் விளம்பில் உள்ள நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை முக்கூர்த்தி தேசிய பூங்காவில் கடந்த 3 ஆண்டுகளில் 27 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2018-ல் 568-ஆக இருந்த அதன் எண்ணிக்கை தற்போது 612-ஆக உயர்ந்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
அழிவின் பட்டியிலில் உள்ள விலங்கினங்களில் நீலகிரி வரையாடும் ஒன்று. ‘ஹெமிடிராகஸ் ஹைலோகிரையஸ்’ (Nilgiritragus hylocrius) என்ற விலங்கியல் பெயர் கொண்ட இந்த விலங்கினம் தமிழகத்தின் மாநில விலங்காகும். 12 வரையாடு இனங்களில் இந்த ஒரு இனம் மட்டுமே, தென்னிந்தியாவில் காணப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 2,600 மீட்டர் உயரத்தில் உள்ள புல்வெளிகளில் வசிக்கும் இந்த வரையாடுகள், ஒருகாலகட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் முழுவதும் பரவியிருந்தன.
இவற்றின் வசிப்பிடங்கள் தற்போது கேரளா மற்றும் தமிழகம் என்ற அளவில் சுருங்கி விட்டன. வேட்டை, சுருங்கிய வசிப்பிடங்கள் மற்றும் கால்நடை மேய்ச்சல் ஆகிய காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை வேகமாக குறைந்துவிட்டு, தற்போது அழிவின் விளம்பில் உள்ளன.
1972-ல் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், வரையாடுகளுக்கான அச்சுறுத்தல் ஓரளவு குறைந்தது.
தற்போதைய காலகட்டத்தில் நீலகிரி மற்றும் ஆனைமலைகளில் மட்டுமே அதிக வரையாடுகள் காணப்படுகின்றன. பழநி, மேகமலை மற்றும் அகஸ்திய மலைகளில் குறைந்த எண்ணிக்கையில் இவை காணப்படுகின்றன.வரையாடுகளின் எண்ணிக்கை 2,000-க்கும் சற்று அதிகமாக இருப்பதாக அறியப்பட்ட நிலையில், முக்கூர்த்தி தேசிய பூங்காவில் இவற்றின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 27 சதவீதம் உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் முக்குருத்தி தேசியப் பூங்கா நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 78.40 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ள இப்பூங்காவில், அழியும் பட்டியலில் உள்ள வரையாடுகள் அதிக அளவு வாழ்கின்றன. இங்கு வனத் துறை சார்பில் வருடாந்திர வரையாடுகள் கணக்கெடுப்பு பணி கடந்த ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில், கடந்த 3 ஆண்டுகளில் வரையாடுகளின் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 2016-ல் 480-ஆக இருந்த வரையாடுகளின் எண்ணிக்கை 2017-ல் 438, 2018-ல் 568 ஆக உயர்ந்தது. கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது 618-ஆக உயர்ந்துள்ளது. உலகளாவிய வன உயிரின நிதியம் உதவியுடன், வனத் துறையினர் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து உலகளாவிய வன உயிரின நிதியம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன் கூறும்போது, “வரையாடுகளின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இளம் வரையாடுகளை அதிகம் காணமுடிந்தது. அதிலும் பெண் வரையாடுகள் அதிகம் தென்பட்டன. வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது வன விலங்கு ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல் கூறும்போது, “முக்கூர்த்தி தேசிய பூங்காவில் வரையாடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது வரவேற்கக்கூடியது. கணக்கெடுப்பில் பாலின விகிதமும் சிறப்பாக உள்ளது தெரியவந்துள்ளது.
முக்குருத்தி தேசியப் பூங்காவில் சுற்றுலா முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், விலங்குகள் இடையூறின்றி உலா வருகின்றன. ஸ்காட்ச் புரூம், கார்ஸ், சீகை போன்ற அந்நிய களைத் தாவரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம், வருங்காலங்களில் வரையாடுகளுக்கு அதிக அளவிலான உணவு கிடைக்கும். தொடர்ந்து, அந்நிய களைத் தாவரங்களை அகற்ற வனத் துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார்.