மாமல்லபுரம் கடலில் கடற்கரைக்கு மிக அருகில் சுற்றித் திரியும் டால்பின்கள். 
தமிழகம்

மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றித் திரியும் டால்பின்கள்; சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

கோ.கார்த்திக்

மாமல்லபுரம்

மாமல்லபுரம் கடற்கரைக்கு மிக அருகில், டால்பின்கள் சுற்றித் திரிவதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரையில் அமைந்துள்ள குடவரைக் கோயில் மற்றும் கடற்கரை அழகைக் கண்டு ரசிப்பதற்காக நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.

இதில், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் சூரியக் குளியல் மற்றும் அலை சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக டால்பின் மீன்கள் கூட்டம், கூட்டமாக கடற்கரைக்கு மிக அருகில் சுற்றித் திரிந்து வருகின்றன. மேலும், அவ்வப்போது கடலில் இருந்து எகிறி, டைவ் அடித்து மீண்டும் கடலில் குதித்து விளையாடுகின்றன.

இதனை, சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், உள்ளூர் மீனவர்கள் இதுகுறித்துக் கூறும்போது, ஆழ்கடல் பகுதிகளில் மட்டுமே டால்பின் மீன்களை அதிகளவில் காணமுடியும்.

இவை மிகவும் அரிதாக எப்போதாவது, கடற்கரைக்கு அருகில் இதுபோலைக் கூட்டமாக சுற்றித் திரியும். டால்பின்களைக் கண்டு ரசிப்பதற்காக, கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருவார்கள் என்று தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT