சென்னை
விளையாட்டுக்கான எதிர்காலம் தமிழகத்தில் சிறப்பாக உள்ளதாக தங்க மங்கை இளவேனில் வாலறிவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் இன்று சென்னை திரும்பினார்.
அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''எனக்கு வாழ்த்து தெரிவித்த, ஆதரவாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் சந்திப்பதாகக் கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து அவர் தமிழகம் திரும்பியதும் அவரைச் சந்திக்க உள்ளேன். ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன.
விளையாட்டுக்கான எதிர்காலம் தமிழகத்தில் சிறப்பாக உள்ளது. அரசுகளும் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றன. அதனால் இன்னும் நிறையப் பேர் விளையாட்டில் அடுத்த நிலைக்கு வருவர்'' என்றார் இளவேனில்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் தங்கம் வென்றவர் இளவேனில். உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற 3-வது இந்தியர் என்ற பெருமையையும் இளவேனில் பெற்றுள்ளார்.