முதலர் நாராயணசாமி: கோப்புப்படம் 
தமிழகம்

வெளிநாட்டு மணலுக்கு கூடுதல் விலையால் சர்ச்சை: தமிழக அரசு மீது புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டால் வாக்குவாதம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் வெளிநாட்டு மணல் பிரச்சினை எழுப்பப்பட்டது.

அசனா (அதிமுக): மலேசியாவிலிருந்து மணல் காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. ஐந்து மாதங்கள் வைத்திருந்தது ஏன்? ஒரு வண்டி கூட காரைக்காலுக்கு தர முடியாத சூழல் உள்ளதே?

வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான்: மாநில அரசு அனுமதியுடன் மணல் இறக்குமதியானது. கட்டுமானப் பணிகளுக்கு மணலை பயன்படுத்தலாம். பொதுப்பணித்துறை ஆய்வு செய்ய ஐந்து மாதங்களானது. பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர் மூலம் மட்டுமே விற்கலாம்.

அன்பழகன் (அதிமுக): தமிழகத்தில் 3 யூனிட் மணல் ரூ. 28 ஆயிரத்துக்கு விற்பனையாகும் சூழலில் வெளிநாட்டு மணல் ரூ. 38 ஆயிரத்துக்கு விற்பனையாகிறதே. தனியார் அதிக விலைக்கு விற்க அரசு துணைபோவது ஏன்? இதில் ரகசிய பேச்சுவார்த்தை நடந்தது என்ன? விசாரணை நடத்த வேண்டும். அரசுக்கும், தனியார் இறக்குமதியாளருக்கும் ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதுதான் விலை உயர்வுக்கு காரணம்.

அமைச்சர் ஷாஜாகன்: இதில் ரகசிய உடன்பாடு ஏதுமில்லை. பத்து இறக்குமதியாளர்களுக்கு உரிமம் தந்துள்ளோம்.

முதல்வர் நாராயணசாமி: காரைக்காலில் கட்டுமானத்துக்கு மணல் கிடைக்கவில்லை. தென்மாநில முதல்வர் மாநாட்டில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இவ்விஷயத்தை தெரிவித்தபோது, மணல் தருவதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து தமிழக அரசை சந்திக்க நேரம் கேட்டோம். ஆனால், நேரம் ஒதுக்கித் தரவில்லை. மணல் தருவதாக ஒப்புக்கொண்டு தமிழக அரசு தரவில்லை.

அதிமுக, காங்கிரஸார் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. "எப்போதும் எதிர்த்துப் பேசிவிட்டு தமிழக அரசை விமர்சித்தால் எப்படி நேரம் ஒதுக்குவார்கள்" என்று அதிமுக எம்எல்ஏ அன்பழகன் பதில் தந்தார்.

செ.ஞானபிரகாஷ்

          
SCROLL FOR NEXT