மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்பட்டுள்ள இலவச பயண அட்டையில் மோசடி செய்வோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மாநகர் போக்குவரத்துக் கழகத்தினால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 3.50 இலட்சம் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.மேலும் மாற்றுதிறனாளிகள், முதியோர்கள், தமிழறிஞர்கள் ஆகியோர் உள்ளிட்டுவர்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு, பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
குறிப்பாக, அரசு கல்லூரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த பயண அட்டையின் பாதுகாப்பு தன்மை கருதி பல்வேறு சிறப்புஅம்சங்கள் உள்ளடக்கிய 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுவாக, பள்ளி மாணவர்கள் சீருடையில் பேருந்தில் பயணம் செய்திட அனுமதிக்குமாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
குறிப்பாக, புறநகர் பேருந்து நிலையங்களில் அரசு கல்லூரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற கட்டணமில்லா பயண அட்டையைத் தவறாக பயன்படுத்துவதாக செய்தி வந்ததன் அடிப்படையில், மாநகர் போக்குவரத்துக் கழக பரிசோதகர்கள் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த 20-08-2019 அன்று செங்குன்றம் பேருந்து நிலையத்தில் காலை சுமார் 10.00 மணி அளவில் தடம் எண்.592 (வள்ளளார்-பெரியபாளையம்) பேருந்தில் பயணச்சீட்டு பரிசோதகர் மேற்கொண்ட ஆய்வில், பயணி ஒருவர் கல்லூரி மாணவருக்கு வழங்கப்பட்டுள்ள கட்டணமில்லா பயண அட்டையினை மோசடி செய்து பயணம் மேற்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதன் பேரில், கன்னிகைப்பேர் ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் லிங்கேஸ்வரன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ள பயண அட்டையினை கலர் நகல் எடுத்து அவருடைய புகைப்படத்திற்கு மாற்றாக அதே ஊரைச் சேர்ந்த வி.செல்வகுமார் என்பரின் புகைப்படம் ஒட்டி மோசடியாக பேருந்தில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தீவிர விசாரணையின் அடிப்படையில், கன்னிகைப்பேர் என்ற ஊரில் சித்ரா ஸ்டுடியோ மற்றும் ஜெராக்ஸ் கடையில் இதுபோன்று மோசடி செய்து, நகல் எடுத்து போலியாக விலையில்லா பயண அட்டைகள் தயாரித்து விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கடையின் உரிமையாளர் குற்றத்தினை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், உடனடியாக மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலரால் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு, காவல் துறையினரால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விலையில்லா பயண அட்டைகளில் குறிப்பாக, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அட்டைகளில் மோசடி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அனைத்து நடத்துனர்களும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடம் இலவச பயண அட்டையினை வாங்கி சரிபார்க்குமாறு சுற்றறிக்கை வாயிலாகவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மாநகர் போக்குவரத்துக் கழக அனைத்து அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சுமார் 300 பேர் ஒருங்கிணைந்து நேற்று (29-08-2019) மேற்கொண்ட (mass checkup) பரிசோதனையில், பேருந்தில் பயணம் செய்து, பயணிகளிடம், அனைத்து பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளையும் வாங்கி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பரிசோதனையில், 200-க்கும் மேற்பட்ட பயணிகள், போலி மற்றும் காலவதியான பயண அட்டைகளில் பயணம் மேற்கொண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இதுபோன்ற தொடர் பரிசோதனையில், பயண அட்டைகளை, போலியாக மற்றும் மோசடியாக பயன்படுத்துவோர்மீது காவல் துறையின் வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.