சென்னை
மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியான செய்திக்குறிப்பு: ''வங்கக் கடலில் ஒடிசாவை ஒட்டி வங்க கடலின் வடமேற்கு பரப்பில், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் வடக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.
குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்யும். அதிலும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
காற்றின் வேக மாறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக பிற மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பொழியும்'' என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.