தமிழகம்

விஷாலுக்கு பிடிவாரண்ட் எச்சரிக்கை: நேரில் ஆஜரானதால் திரும்பப்பெற்றது நீதிமன்றம் 

செய்திப்பிரிவு

நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் விஷால் ஆஜரானார்.எனவே, வாரண்டை திரும்பப்பெற்றது நீதிமன்றம்.

சென்னை வடபழனியில் விஷாலுக்குச் சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தால் பிடித்தம் செய்யப்பட்ட டி.டி.எஸ். தொகை, கடந்த 5 ஆண்டுகளாகக் குறிப்பிட்ட காலத்துக்குள் வருமான வரித்துறைக்குச் செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து வருமான வரித்துறை பலமுறை விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்தப் பதிலும் அளிக்காததால், எழும்பூரில் உள்ள பொருளாதாரக் குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் வருமான வரித்துறை கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட எழும்பூர் நீதிமன்றம், விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க இரண்டு முறை சம்மன் அனுப்பியது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி மலர்மதி முன் விசாரணைக்கு வந்தபோதும் விஷால் ஆஜராகவில்லை. விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இன்னும் சம்மன் தங்களுக்கு வந்துசேரவில்லை எனக்கூறி, ஆஜராக மேலும் ஒருநாள் விலக்கு கோரும் மனுவையும் தாக்கல் செய்தார்.

அப்போது வருமான வரித்துறை தரப்பு வழக்கறிஞர், சம்மன் வரவில்லை எனக் கூறும் விஷால், வழக்கறிஞர் மூலம் எப்படி விலக்கு கோரமுடியும் எனக் கேள்வி எழுப்பியதோடு, சம்மனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சான்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அவற்றைப் பதிவுசெய்த நீதிபதி மலர்மதி, வழக்கை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்ததுடன், விஷால் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைக்காக விஷால் இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், 4 கோடி ரூபாய் டி.டி.எஸ். பாக்கி தொடர்பான வழக்கைத் தொடர்ந்து நடத்துவதா அல்லது டி.டி.எஸ். பாக்கியைச் செலுத்தி தீர்வு காண்பதா? என்பதை ஆடிட்டருடன் ஆலோசித்து தெரிவிக்க வேண்டும் என விஷாலுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

விஷால் நேரில் ஆஜரானதால், பிடிவாரண்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. வழக்கு செப். 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT