அருண்ஜெட்லி: கோப்புப்படம் 
தமிழகம்

தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர் அருண்ஜெட்லி: முதல்வர் பழனிசாமி இரங்கல்

செய்திப்பிரிவு

சென்னை

தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர் அருண்ஜெட்லி என, அவரது மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜேட்லி உடல்நலக் குறைவு காரணமாக, எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (ஆக.24) காலமானார். அவருக்கு வயது 66. அவருடைய மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், "மத்திய நிதித் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் அமைச்சராகவும், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், அரசியல் உலகில் பிரபலமான தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய அருண்ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் அதிர்ச்சியும், மிகுந்த வருத்தமும் அடைந்தேன்.

அருண்ஜெட்லி, தன்னுடைய மாணவ பருவத்தில் கல்வித் திறன் மற்றும் பிற கல்வி சாரா செயல்பாடுகளுக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவ சங்கத் தலைவராகவும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்துள்ளார்.

இந்தியாவின் நிதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், மக்களின் நன்மை மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பொருட்கள் மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியவர். நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர். கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாக பழகக் கூடிய பண்பாளர்.

அருண்ஜெட்லியின் மறைவு, அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரது கட்சித் தொண்டர்களுக்கும், இந்தியாவுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் அனுதாபங்கள்", என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT