தமிழகம்

சிதம்பரம் கைது ஜனநாயக படுகொலை : கே.எஸ்.அழகிரி 

செய்திப்பிரிவு

சென்னை

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை, கிரிமினலைப்போல் கைது செய்துள்ளது, மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. பாஜக அரசு தவறான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இதையடுத்து, அவரைக் கைதுசெய்ய சிபிஐ தீவிரம் காட்டியது. சிதம்பரம் தரப்பில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வெள்ளிக்கிழமை அன்று விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிதம்பரம் இன்று இரவு 8.15 மணியளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபில், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும், வழக்கறிஞர்களும் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு செய்தியாளர்களுக்கு சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர்.

பின்னர் தனது டெல்லி இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்ற அவரை பின் தொடர்ந்து சிபிஐ , அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்து கைது செய்து அழைத்துச் சென்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இது ஒரு ஜனநாயக படுகொலை என தெரிவித்தார்.

“வழக்கில் பெயர் இல்லாத ஒருவரை, முன்னாள் நிதியமைச்சரை, உள்துறை அமைச்சரை, இந்திய நலனுக்காக பாடுபட்ட ஒரு மனிதரை, இந்தியாவின் ஜிடிபியை 9 சதவீதம் வரை உயர்த்தியவரை ஒரு கிரிமினல்போல் நடத்துவதும் கைது செய்திருப்பதும் ஜனநாயக படுகொலை. பாஜக அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி உள்ளது”. என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT