இந்திய மோட்டார் விளையாட்டு சம்மேளனம், யாட் கிளப் சார்பில் தேசிய அளவிலான `இந்தியன் நேஷனல் ரேலி சாம்பியன்ஷிப்' கார் பந்தயம் கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார்ஸ் கார் பந்தய மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிச் சுற்றில் சுகேம் கபிர்-யூனுஸ் இளையாஸ், சேட்டன் சிவராம்-திலீப் சரண் ஆகியோர் கடும் போட்டியிட்டனர். இறுதியில் சேட்டன் சிவராம் வெற்றி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார். இதுகுறித்து அவர் கூறும்போது, "முதல் சுற்றுப் போட்டியில், எனக்கும், அடுத்து வந்தவருக்கும் குறுகிய இடைவெளியே இருந்தது. எனவே, முதலில் இடைவெளியை அதிகரிக்க முடிவு செய்தோம்.
பின்னர், பாதுகாப்பாக விளையாட முடிவு செய்தோம். இது நாங்கள் வெற்றிபெற வழிவகுத்தது" என்றார். இப்போட்டியில் ஒட்டுமொத்த ஐஎன்ஆர்சி போட்டியில் சேட்டன் சிவராம்-திலீப் சரண் குழு, யூனுஸ் இளையாஸ்-ஹரிஷ் கவுடா குழு, பாபித் அமர்-சனத் குழு ஆகியவை முதல் 3 இடங்களை வென்றன.
ஐஎன்ஆர்சி 2-வது பிரிவு போட்டியில் யூனுஸ்இளையாஸ்-ஹரிஷ் கவுடா, மாஸ்கரேன்ஹஸ்-ஷ்ருப்தா படிவால், சுகேம் கபிர்-ஜீவ ரத்தினம் ஆகியோரும், ஐஎன்ஆர்சி 3-வது பிரிவு போட்டியில் சேட்டன் சிவராம்-திலீப் சரண், பாபித் அமர்-சனத், ஆதித்ய தாக்கூர்- விரேந்தர் காஷ்யப் ஆகியோரும், ஐஎன்ஆர்சி 4-வது பிரிவு போட்டியில் வைபவ் மாரட்டி- அர்ஜுன், மனோஜ் மோகன்-பிரான்சிஸ் சச்சின், ரக்ஷித் அய்யர்-சந்திரசேகர் ஆகியோரும் முதல் 3 இடங்களை வென்றனர்.