தமிழகம்

விருதுநகர் அருகே வேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயம்

மணிகண்டன்

விருதுநகர்

விருதுநகர் அருகே தனியார் மில்லுக்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உட்பட 12 பேர் பலத்த காயமடைந்தனர்.

விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ஆடை உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு திருவில்லிப்புத்தூர் சாலையில் உள்ள அழகாபுரியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு விருதுநகர் நோக்கி இன்று காலை வேன் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. வேனை மூலக்கரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டினார்.

புலிப்பட்டி விலக்கு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் மணிகண்டன், பெண் தொழிலாளர்கள் உட்பட 12 பேர் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்த ஆமத்தூர் போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த நபர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT