சென்னை
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுதினத்தை முன்னிட்டு, சென்னை, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர்
தீர்த்தகிரி என்ற இயற்பெயர் கொண்ட தீரன் சின்னமலை 1756-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். கிழக்கிந்திய கம்பெனி படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க பல்வேறு கட்டங்களாக போர் புரிந்து வந்த இவர், சூழ்ச்சி மூலம் கைது செய்யப்பட்டு, சங்ககிரி கோட்டையில் 1805-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி தூக்கி லிடப்பட்டார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் ஆக.3-ம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
தீரன் சின்னமலை நினைவு தினமான நேற்று, கிண்டி தொழிற் பேட்டை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனி சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்தனர். அதன்பின், சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், மக்களவை முன்னாள் துணைத் தலை வர் தம்பிதுரை, தலைமைச் செயலர் கே.சண்முகம், செய்தித் துறை இயக்குநர் பொ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மு.க.ஸ்டாலின் அஞ்சலி
தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
முதல்வராக கருணாநிதி இருந்த போதுதான் தீரன் சின்னமலைக்கு கிண்டியில் சிலை வைக்கப்பட்டது. திமுக மத்திய ஆட்சியில் பங்கேற்றிருந்த போதுதான் தீரன் சின்னமலை நினைவு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
அதேபோல், திமுக ஆட்சியில் தான் கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உண்மையாக இருப்பதே தீரன் சின்னமலைக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும் என்று ட்விட்டரில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.