சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் இன்று (வெள்ளிக்கிழமை) உயரமான உறைகிணறு, அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல்துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. கடந்த மாதம் மண்பாண்ட ஓடுகள், இரட்டை சுவர், நீளமான சுவர், அகலமான சுவர் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முருகேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உயரமான உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 6 உறைகள் உள்ளன.
மேலும் கீழே தோண்டும்போது இன்னும் உறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். அதேபோல் கருப்பையா, முருகேசன், போதகுரு, மாரியம்மாள் ஆகியோரது நிலத்தில் மணிகள் உள்ளிட்ட அணிகலன்கள் கிடைத்துள்ளன.
மணிகளில் மண் படிந்துள்ளதால், அவற்றை தூய்மைப்படுத்தி பிரித்தெடுக்கும் பணியை தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட குழிகளில் அதிகளவில் மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன.