‘நலமான வாழ்விற்கு மக்களின் பங்கு’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியை சென்னை அரசு பொது மருத்துவமனை நடத்துகிறது.
இதுதொடர்பாக சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஆர்.விமலா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை அரசு பொது மருத்துவமனையின் இரைப்பை குடலியல் அறுவைச் சிகிச்சை துறை சார்பில் ஆண்டு தோறும் பொதுமக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த அண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு ‘நலமான வாழ்விற்கு மக்களின் பங்கு’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் என்று 3 பிரிவுகளில் போட்டி நடக்கிறது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமல் இந்த கட்டுரை இருக்க வேண்டும்.
கட்டுரையை ghgastro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். கட்டுரையை தபால் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன், இயக்குநர், இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சைத் துறை, எண்.244A, நான்காம் தளம், இரண்டாவது அடுக்குமாடி, அரசு பொது மருத்துவமனை. பூங்காநகர், சென்னை - 3 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) சுதந்திர தினத்தில் நடைபெற உள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இவ்வாறு டீன் டாக்டர் ஆர்.விமலா தெரிவித்துள்ளார்.