தி.மு.கழகம் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்ததும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்; சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வோம், என சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேசினார்.
இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் குறித்து சட்டமன்றத்தில் பேசினார். அவர் பேசிய உரையின் விவரம்:
“என்னென்ன வாக்குறுதிகள் வழங்கியிருக்கின்றோமோ. அதை நிச்சயமாக செய்வோம். சொன்னதைமட்டுமல்ல சொல்லாததையும் செய்வோம் தலைவர் எங்களை அப்படித்தான் வளர்த்திருக்கின்றார். எனவே, நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
முதல்வர் அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தந்ததுபோல கீழே இருக்கின்ற சக்கரம்மேலே வரும், மேலே இருக்கின்ற சக்கரம் கீழே வரும் என்றார். அதுதான் வரப்போகின்றது. அதைத் தான் எங்களுடைய உறுப்பினர் பொன்முடியும் சொன்னார். 22 இடங்களில் தேர்தல்நடந்தது என்றால், 13 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றிருக்கின்றது.
9 இடங்களில் உங்களுடைய அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கின்றது. 9 பெரியதா? 13 பெரியதா? எனவே, மக்களின் ஆதரவு 13 என்றுதான் சொல்லமுடியும். மக்கள் அந்தளவிற்கு 22 தொகுதிகளில் 13-ஐ, தி.மு.கழகத்திற்குகொடுத்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, ஏற்கனவே திருவாரூரைத் தவிர்த்து 12 தொகுதிகள் உங்களிடத்தில் இருந்த தொகுதிகள் அதை நாங்கள் கைப்பற்றியிருக்கின்றோம். எங்களுடைய வளர்ச்சியை இது காட்டுகின்றது.
“மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ” என்று சொன்னது உண்மைதான். இப்பவும் சொல்கின்றேன் நாங்கள் சொன்ன உறுதிமொழியில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம். நிச்சயமாக நிறைவேற்றுவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு இந்தக் கேள்வியைக் கேளுங்கள். அதன் பிறகு, அதற்குப் பதில் சொல்கின்றோம்”
இவ்வாறு அவர் பேசினார்.