சென்னையை அடுத்த தாம்பரத்தில் ரவுடிகள் மோதலில் 2 ரவுடிகள் கொல்லப்பட்டனர், ஒருவர் தப்பி ஓடினார்.
சேலையூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி சுரேஷ். இவர்மீது பல அடிதடி வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுரேஷ் 2 மாதத்துக்கு முன் வெளியே வந்தவர் மீண்டும் கட்டப்பஞ்சாயத்து, மாமுல் என இறங்கியுள்ளார்.
இந்நிலையில் தனது கூட்டாளிகளுடன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தாம்பரத்தை அடுத்த கடபேரி அற்புதம் நகர் வழியாக வந்துள்ளார். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளை மறித்த கும்பல் அவர்கள் இருவரையும் வெட்டியது.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன்வந்த இன்னொருவர் தப்பி ஓடிவிட்டார். அவர்களை வெட்டி கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. சுரேஷுடன் அவரது கூட்டாளி சின்னா (எ) பிரதீப் என்பவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போலீசார் இருவர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில், கட்டப்பஞ்சாயத்து, மாமுல், போலீஸாரை மதிக்காமல் பொதுவெளியில் மோதலில் ஈடுபடுவது, பொதுமக்களை தாக்குவது என சுரேஷும் கூட்டாளிகளும் இருந்துள்ளனர். சமீபத்தில் இவ்வாறு தாக்கும்போது முதியவர் ஒருவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கியுள்ளார் சுரேஷ்.
தாக்கப்பட்ட முதியவரின் மகன்கள் இதனால் கோபமடைந்து சுரேஷ் மற்றும் கூட்டாளிகளை பழிவாங்க நேரம் பார்த்ததாகவும், அவர்களை பழி தீர்க்க சுரேஷ் ஆயுதங்கள் மற்றும் கூட்டாளிகளுடன் வந்ததாகவும் அதற்கு முன்னர் எதிர்தரப்பினர் முந்திக்கொண்டு பழி தீர்த்ததாகவும் கூறப்படுகிறது.
தாம்பரம் உள்ளிட்ட மவுண்ட் துணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள பீர்க்கங்கரனை, தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பல இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்ட எல்லையிலும் ரவுடிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பெரிய அளவில் 50 பேருக்கும் மேற்பட்ட கேங்குகளாக இயங்குகின்றனர். பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் அனைவருக்கும் அச்சுறுத்தலாக உள்ளார்களாம். இவர்கள்மீது குறைந்தது 10 முதல் 50 வழக்குகள் வரை உள்ளதாம்.
சரியான காவல் அதிகாரி இங்கு பணியமர்த்தப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும், ரவுடிகள் ஆதிக்கம் குறையும் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.