பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 12 பி அந்தஸ்து பெறாததால் 5 ஆண்டுகளாக வழங் கப்பட்ட பட்டப் படிப்பு பட்டங்கள் செல்லாமல் போக வாய்ப்பு இருப்பதாக, அவினாசிலிங்கம் பல்கலைக்கழக ஆசிரியைகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின், அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத் தலைவர் என்.ரேணுகா தேவி, பொதுச்செயலாளர் பி.நளினி, நிர்வாகக் குழு உறுப்பினர் சுபாஷினி ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அங்கீகாரத்தை அவி னாசிலிங்கம் பல்கலைக்கழகம் பெறாமல் இருந்து வருவதால், கடந்த ஜூன் மாதத்துடன் நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் நிர்வாகம் சார் பில் வெளியிடப்பட்டு வரும் செய்தி கள் உண்மைக்கு புறம்பாகவும், பல்கலைக்கழக ஆசிரியைகள், மாணவிகள், பெற்றோரை தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது.
கடந்த ஜூலை 1-ம் தேதி, புது டெல்லி மனிதவள மேம்பாட்டு துறை (எம்.எச்.ஆர்.டி.) அதிகாரி களைச் சந்தித்த பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் ஆசிரியைகள் அடங்கிய 8 பேர் கொண்ட குழு, நிர்வாக அமைப்பின் திருத்தம் கொண்ட சாரம்சத்தைத்தான் சமர்ப்பித்தது. இந்நிலையில், யு.ஜி.சி. மற்றும் எம்.எச்.ஆர்.டி. இடையில் எம்.ஓ.ஏ. சமர்ப்பித்ததாக வும், அதன் விரைவு நடவடிக்கைக் காக காத்திருப்பதாகவும் அறங்காவலர் முன்னுக்குப் பின் முரணாக செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
எம்.எச்.ஆர்.டி. விதிகளின் படி அவினாசிலிங்கம் பல்கலைக் கழகம் அதன் விதிகளைத் திருத்தம் செய்யாமல் இருந்தாலும் நிரந்தர நிதியை யு.ஜி.சி. வழங்கும் என எந்த இடத்திலும் உத்தரவாதம் தரவில்லை. எம்.ஓ.ஏ. பூர்த்தி செய்தால் மட்டுமே நிரந்தர நிதி வழங்கப்படும் என யு.ஜி.சி. திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆனால், எம்.ஓ.ஏ. பதிவு செய்வதில் மெத்தனப் போக்கை கடைபிடித்து வரும் பல்கலைக்கழக நிர்வாகம், சுயநிதிப் பல்கலைக்கழகமாக மாற்ற மாட்டோம் என வெறுமனே மட்டும் கூறி வருகிறது. ஏற்கெனவே, யு.ஜி.சி. நிதியுதவி ஜூன் மாதத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, காலதாமதம் செய்யும்பட்சத்தில், தானாகவே அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் சுயநிதிப் பல்கலைக்கழகமாக மாற வாய்ப்பு உள்ளது.
யு.ஜி.சி. விதிகள்படி 12 பி அந்தஸ்தை கடந்த 2010-ம் ஆண்டு முதல் பல்கலைக்கழக நிர்வாகம் வாங்காமல் இருந்து வருகிறது. இதனால், அந்த ஆண்டு முதல் வழங்கப்பட்ட பட்டப் படிப்புகள் செல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால், படித்து முடித்த மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். இந்த விஷயத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது செயற்குழு மற்றும் பொதுக்குழுவைக் கூட்டி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.