புதுக்கோட்டையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் சிபிஐ அலுவலர்கள் திணறி வருகின்றனர்.
புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் க.கலைக்குமார். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். இவரது மனைவி ராஜம். பள்ளி ஆசிரியை. இவர்களது மகள் அபர்ணா(15), மகன் நிஷாந்த்(6).
கடந்த 2011 மார்ச் 9-ல் பெற்றோர் பள்ளிக்குச் சென்று விட்டதால், அபர்ணா, நிஷாந்த் ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அபர்ணாவைக் கொலை செய்து, அவரது உடலை ஒரு அறைக்குள் மின் விசிறியில் தொங்கவிட்டனர். பின்னர், பீரோ வில் இருந்த 25 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து கணேஷ் நகர் போலீஸார் விசாரித்தனர். வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவையடுத்து 2011 டிசம்பர் 13-ம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப் பட்டது. அப்போதும் புலனாய்வில் முன்னேற்றம் இல்லாததால், வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார், 2013 செப்டம்பர் 27-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 26-ம் தேதி சந்தேகத்தின்பேரில் 5 பேரைப் பிடித்த போலீஸார், அவர் களை புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால், அனைவரும் விடுவிக்கப் பட்டனர். செப்டம்பர் 27-ம் தேதி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் சிபிசிஐடி போலீஸார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத தால், சிபிஐ விசாரிக்க உயர் நீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதை யடுத்து, சிபிஐ கண்காணிப்பாளர் ஹபீஸ்சிங் தலைமையிலான அலு வலர்கள் 2013 டிசம்பர் 17-ல் விசாரணையைத் தொடங்கினர். மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானவர்களிடம் பலமுறை விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், வழக்கை துரிதப்படுத்தக்கோரிய மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி, மத்திய உள்துறை சார்பில் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குமாறு 2015 ஜூன் 22-ம் தேதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் இதுவரை குற்ற வாளிகளைப் பிடிக்க முடியாமல், சிபிஐ அலுவலர்கள் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறும்போது, “சிபிஐ தலையிட்டும் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாதது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை சார்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கு மாறும், இந்த தொகையை குற்ற வாளிகளிடமிருந்து வசூலித்துக் கொள்ளுமாறும், இது தொடர் பான அறிக்கையை வரும் 27-ம் தேதிக்குள் தாக்கல் செய்யு மாறும் உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது” என்றனர்.
இதுகுறித்து சிபிஐ அலுவலர் களிடம் கேட்டபோது, “மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். விரைவில் குற்ற வாளிகள் பிடிபடுவர்” என்றனர்.