தமிழக வரலாற்றின் பல முக்கிய தகவல்களை கல்வெட்டுகள் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று தொல்லியல் ஆய்வாளர் க.பத்மாவதி தெரிவித்தார்.
சென்னை பெரியார் திடலில் நேற்று முன்தினம் தமிழக மூதறிஞர் குழு சார்பாக தொல்லியல் ஆய்வுகள் குறித்த கருத்தரங்கில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட க.பத்மாவதி பேசியதாவது:
தமிழர்களின் சங்கக் காலம் கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ம் நூற்றாண்டு வரை என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால், தமிழர்களின் சங்கக் காலம் அதற்கு முன்பே இருப்பதற்கான சான்றுகள் நம்மிடம் உள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதபாளையம் ஆகிய இடங்களில் கிடைத்துள்ள கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
மீனாட்சியம்மன் கோயிலில் தமிழ் பிராமி எழுத்துகளில் கிடைத்துள்ள கல்வெட்டு நமக்கு கிடைத்துள்ள கல்வெட்டுகளில் காலத்தால் முந்தியது. வேலாயுத பாளையத்தில் கிடைத்துள்ள கல்வெட்டில் நமக்கும் ரோமானிய நாட்டுக்கும் இருந்த வணிக பரிவர்த்தனைக்கு சான்றுகள் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் வரி இயல் அறிஞர் எஸ்.ராஜரத்தினம், தமிழக மூதறிஞர் குழுவின் செயலாளர் இரா.பரஞ்சோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.