எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி

 
தமிழகம்

“திமுக ஆட்சியிலும் விவசாயிகள் மீதான 5,000+ வழக்குகள் ரத்து செய்யப்பட்டன” - உதயநிதி

வெற்றி மயிலோன்

சென்னை: “கடந்த திமுக ஆட்சியின் போது, குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்கள், 8 வழிச் சாலை திட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம், மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்டவைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, “விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என்று ஒரு அமைச்சர் பேசியிருந்தார். அது சரியான தகவல் அல்ல.

எங்கள் ஆட்சியின் போது, குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்கள், 8 வழிச் சாலை திட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம், மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்டவைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட வழக்குகளை முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாபஸ் பெற்றார். அப்போது 110 விதியின் கீழ் இந்த வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை. அதிகாரிகளை அழைத்து வழக்குகளை வாபஸ் பெற உத்தரவிட்ட பிறகு, சட்டப்பேரவையில் தெரிவித்தார்” என்றார்.

முன்னதாக, விதி எண் 110-இன் கீழ் முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை, தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

ஜனநாயக உரிமைகளை மதிக்கும் நமது அரசு, கடந்த ஆட்சியாளர்களால் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது.

விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர்களது நியாயமான கோரிக்கைக்களுக்கும் இவ்வரசு உறுதுணையாக நிற்கும். திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சில விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டது.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக, விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற நோக்கத்தோடு, விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று போராடிய விவசாயிகள் மீதும் முந்தைய அரசால் மனித நேயமற்ற வகையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT