கச்சத்தீவு அருகே இலங்கை கடற் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரின் காவலை மன்னார் நீதிமன்றம் நான்காவது முறையாக வருகிற 17-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜுன் 1-ம் தேதி கடலுக்குச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லையை கடந்து வந்து மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளை கைப்பற்றினர். அதில் இருந்த 14 மீனவர்களை சிறைபிடித்தனர்.
இந்த மீனவர்கள் தலை மன்னாரில் உள்ள கடற்படை தளத்துக்கு கொண்டு செல்லப் பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவ் வழக்கை விசாரித்த மன்னார் நீதிமன்ற நீதிபதி ஆசிர்வாதம் அலெக்ஸ் ராஜா மீனவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 14 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப் பட்டனர்.