கச்சத்தீவு அருகே இலங்கை கடற் படையினர் ராமேசுவரம் மீனவர்களை தாக்கி வலைகளை அறுத்து எறிந்த சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தி லிருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், ஐநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சிறிய ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
அவர்கள், ராமேசுவரம் மீனவர்களிடம் ‘இது இலங்கை கடற்பகுதி. இங்கு மீன்பிடிக்கக்கூடாது’ என எச்சரிக்கை விடுத்ததோடு, ஐந்து விசைப்படகுகளில் இருந்த வலைகளை அறுத்து கடலுக்குள் வீசியுள்ளனர். மேலும், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கடலில் கொட்டினர்.
இதனால் அச்சமடைந்த மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பியதாகவும், மேலும் சில மீனவர்கள் வழக்கத்துக்கு மாறான இடங்களில் வலைவிரித்து, போதிய மீன்பாடு இன்றி வெறுமனே கரை திரும்பியதாக செய்தியாளர்களிடம் மீனவர்கள் தெரிவித்தனர்.