சிட்டுக்குருவிகள், அணில்களை பாதுகாக்க மரக்கிளைகளில் செயற்கை கூண்டு அமைக்க புதுச்சேரி நகராட்சி புது முயற்சி எடுத்துள்ளது.
சிட்டுக்குருவிகள், அணில்கள் ஆகியவற்றை வீடுகளில் அடிக்கடி காண முடியும். தற்போது இவ்வகை குருவிகளையும், அணில்களையும் பார்ப்பது அரிதாகி வருகிறது. இதையடுத்து சிட்டுக்குருவிகள், அணில்களை காக்க புதுச்சேரி நகராட்சி புதிய முயற்சியை எடுத்துது.
புதுச்சேரி நகரப்பகுதியில் பூக்களுடன் கூடிய மரங்களே அதிகம் இருக்கும். பழவகை மரங்கள் குறைவுதான் என்பதால் புதுச்சேரியில் முதலியார்பேட்டை, ஜோதி நகர் உட்பட காலியிடங்களில் உள்ள ஐந்து அத்தி மரங்கள், அரச மரங்களை வேருடன் பிடுங்கி வந்து சட்டப்பேரவை எதிரேயுள்ள பாரதி பூங்காவில் இன்று நட்டனர்.
இதுதொடர்பாக நகராட்சி கால்நடை மருத்துவ அதிகாரி குமரன் கூறியதாவது:
முன்பு ஓட்டு வீடுகள், மரங்கள் அதிகளவில் இருக்கும். ஓட்டுவீடுகளில் அணில்கள், சிட்டுக்குருவிகளை பார்க்க முடியும். தற்போது வீடு கட்டும் முறை மாறியுள்ளது.
அழியும் இனங்களை காப்பாற்ற புதிய முயற்சியாக வனத்துறை ஒப்புதலுடன் புதுச்சேரியில் காலியிடங்களில் வளர்ந்திருந்த 5 அத்தி மரம், அரச மரங்களை வேருடன் எடுத்து வாகனத்தில் வைத்து பாரதி பூங்கா எடுத்து வந்து நட்டோம்.
மரக்கன்றுகள் வைத்தால் அது வளர்வதற்கு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்பதால், காலி இடங்களில் இருந்த மரங்களை பிடுங்கி, பூங்காவிற்குள் நட்டுள்ளோம். பூங்காக்கள், ஏரிப் பகுதிகளில் பழம் தரும் மரக்கன்றுகளை நட உள்ளோம்.
சிட்டுக்குருவிகளுக்காக மரக்கிளைகளில் செயற்கை கூண்டு அமைக்க உள்ளோம். முதல்கட்டமாக நூறு கூண்டுகள் தயாரிக்க நகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சிட்டுக்குருவி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.