மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ராகி, நவதானியம், சோயா, கம்பு ரக நூடுல்ஸ்கள் விற்பனை அதிகரித்துள்ளது. ரூ. 40 விலையுள்ள ஒரு பாக்கெட் தானிய நூடுல்ஸ் மூலம் சாதாரணமாக மூவர் சாப்பிடலாம்.
உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஈயம் அதிகளவில் சேர்க்கப்படுவதாக கூறி மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டது. பெரும்பாலான வீடுகளில் துரித உணவு சமையலுக்கு மேகி நூடுல்ஸே கைகொடுத்து வந்தது. பரபரப்பான வாழ்க்கை முறையில் இரண்டே நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த உணவுப் பட்டி யலில் நூடுல்ஸ் இடம் பிடித்தது. இப்போது தான் பெற்ற குழந்தைக்கே விஷத்தை கொடுத்திருக்கிறோமே என, தாய்மார்கள் வருந்தத் தொடங்கி யுள்ளனர்.
பாரம்பரிய நூடுல்ஸ்
மேகி நூடுல்ஸ் தடைசெய்யப் பட்டுள்ளதால் இயற்கை அங்காடி களில் பாரம்பரிய நூடுல்ஸ்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இவை முன்பை விட பத்து மடங்கு அதிகமாக விற்பனையாவதாக சொல்கிறார் நாகர்கோவிலில் ஆர்கானிக் பசுமையகம் நடத்தி வரும் பசுமை சாகுல்.
கடும் கிராக்கி
அவர் கூறும்போது, ‘மாறி வரும் உணவு பழக்கத்தால் மனிதர்களின் சராசரி ஆயுள் குறைந்து வருகிறது.
இதற்கு மிக முக்கிய காரணம் தவறான நுகர்வு கலாச்சாரம் தான்.
தயாரிக்கும் நேரம் குறைவு என்பதால் மேகி நூடுல்ஸ் நிறைய பேரின் விருப்ப உணவு ஆனது. ஆனால் இப்போது பதற்றமடைகின்றனர்.
தமிழகம் முழுவதிலும் உள்ள ஆர்கானிக் கடைகளில் ராகி நூடுல்ஸ், நவதானிய நூடுல்ஸ், சோயா நூடுல்ஸ், கம்பு நூடுல்ஸ் ஆகியவற்றுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இந்த நூடுல்ஸ்களை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். வழக்கமாக என் கடையில் இவை தினசரி 10 பாக்கெட்டுகள் விற்கும். தற்போது 120 பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன.
ரூ. 40 விலையுள்ள ஒரு பாக்கெட் நூடுல்ஸை சமைத்தால் சாதாரணமாக 3 பேர் சாப்பிடலாம்’ என்றார் அவர்.