தமிழகம்

பிஎஸ்என்எல் ஊழியரை தாக்கிய முன்னாள் எஸ்.ஐ கைது

செய்திப்பிரிவு

பிஎஸ்என்எல் ஊழியரை தாக்கிய முன்னாள் எஸ்.ஐ. (ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்) கைது செய்யப்பட்டார்.

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் குணசேகரன் (50). இவர் ராயபுரம் கல்மண்டபத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் மாலை பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி நகரில் டெலிபோன் வயரை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் அப்துல் என்பவரின் வீட்டின் முன்பகுதியில் புதைக்கப்பட்டு இருந்த டெலிபோன் வயரையும் தோண்டி எடுத்து சரி செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த அப்துல், என் வீட்டின் முன்பு ஏன் குழி தோண்டினாய் என்று அவரிடம் கேட்டார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் குணசேகர் காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த வர்கள் வந்து அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து பழைய வண்ணாரப் பேட்டை போலீஸில் புகார் செய்யப்பட்டது.

போலீஸார் விசாரணை நடத்தி ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் அப்துலை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT