தமிழகம்

மூவர் குழுவின் தமிழக பிரதிநிதியாக பொதுப்பணித் துறை முதன்மை செயலர் என்.எஸ்.பழனியப்பன் நியமனம்

செய்திப்பிரிவு

மூவர் குழுவின் தமிழக பிரதிநிதியாக தமிழ்நாடு பொதுப்பணித் துறை முதன்மை செயலர் என்.எஸ்.பழனியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பொருட்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் எல்.ஏ.வி.நாதன் தலைமையில் தமிழக பிரதிநிதியாக தமிழ்நாடு பொதுப் பணித் துறை முதன்மை செயலராக இருந்த சாய்குமாரும், கேரள மாநிலப் பிரதிநிதியாக அம்மாநில நீர்பாசனத் துறை கூடுதல் செயலர் குரியனும் நியமிக்கப்பட்டனர்.

அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக தேக்கிய பின்னர் அணை கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக இக்குழு இருமுறை கூடி ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளது.

கடைசியாக கடந்த ஆண்டு நவ. 24-ம் தேதி அணையை ஆய்வு செய்து கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிச. 4-ம் தேதி சாய்குமார் தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைவராக மாற்றப்பட்டார். இதனையடுத்து ஊரக வளர்ச்சி துறையில் செயலராக பணியாற்றிவந்த என்.எஸ்.பழனியப்பன் பொதுப்பணித்துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 6 மாதங்களாக மூவர் குழு கூட்டம் நடைபெறாமல் இருந்தது.

இன்று கூட்டம்

இதற்கிடையில் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் முயற்சிக்கு கேரள அரசு ஆய்வு மேற்கொண்டது. இதற்கு தமிழக அரசும், தென் மாவட்ட விவசாயிகளும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால் மூவர் குழுவின் கூட்டம் நடைபெறாமல் இருந்துவந்ததால் தமிழக விவசாயிகள் அதிருப்தி அடைந்திருந்தனர். இந்த நிலையில் மூவர் குழு கூட்டம் ஜூன் 22-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளதாக கடந்த வாரம் குழுவின் தலைவர் நாதன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக பிரதிநிதியாக பொதுப்பணித் துறை முதன்மை செயலர் என்.எஸ்.பழனியப்பனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT