கோவையில் கடைகள், வீதிகள், வர்த்தக மையங்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டுமென்று சமூக நீதிக்கான இளைஞர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்பினரிடம் இருந்து மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் கிறிஸ்துராஜ் பெற்றுக் கொண்டார். சமூக நீதிக்கான இளைஞர் அமைப்பினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்களில் சாதிப் பெயர்கள் உள்ளன.
தமிழகத்தில் 1978-ம் ஆண்டு வெளியான அரசாணையில், சாதிப் பெயர்களில் இயங்கும் கடைகள், தெருக்கள் உடனடியாக மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
பிஹார் தொழிலாளர்கள்
கரியாம்பாளையத்தில் தாங்கள் பணியாற்றிய நிறுவனத்திடமிருந்து ஊதியம் பெற்றுத் தரக் கோரி கடந்த சில வாரங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பிஹார் மாநில ஒப்பந்தத் தொழிலாளர்கள் 48 பேர், நேற்று பாய் படுக்கையுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் ஆர்ப்பாட்டத்தை நடத்த முற்பட்டனர். போலீஸார் அவர்களை தடுத்ததால், வாயிலி லேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு இன்ஜினீயரிங் சங்கம் சார்பாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சுரங்க நடைபாதை
இருகூரில் ரயில்வே மேம்பாலம் கட்டிய பிறகு, சுரங்க நடைபாதை பணி முடிவடையாததால், அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் ரயில்வே பாதைகளை கடந்து செல்ல வேண்டிய அபாயகரமான சூழல் நிலவுகிறது. எனவே, சுரங்க நடைபாதை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி
இருகூர் இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
சுமார் 1300 மாணவ மாணவியர் படித்து வரும் பொள்ளாச்சி - வடசித்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே பணியிடங்களை நிரப்ப வேண்டுமெனக் கோரி இப் பள்ளி மாணவ, மாணவிகள் மனு அளித்தனர். கோவை, புலியகுளம், பஜார் வீதியை சேர்ந்தவர் முஸ்லான் (எ) பிரேம்குமார். லோடிங் வேலைக்காக சென்னை சென்றவர் 22 நாட்களாகியும் வீடு திரும்பி வரவில்லை. அவரை அழைத்து சென்றவர் முன்னுக்குப் பின் முரணான பதில் சொல்லி மழுப்புகிறார். போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பிரேம்குமாரை அழைத்துச் சென்றவரிடம் விசாரித்து மகனை மீட்டுத் தரக் கோரி அவரது தாயார் அந்தோணியம்மாள் மனு அளித்தார்.