தமிழகம்

தமிழக மீனவர்கள் 37 பேர் நாடு திரும்பினர்

செய்திப்பிரிவு

இலங்கையில் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட 37 தமிழக மீனவர் கள் நேற்று காரைக்கால் தனியார் துறைமுகத்தை வந்தடைந்தனர்.

கடந்த ஏப்.4-ம் தேதி வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேரையும், அவர்களது 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்ட 37 மீனவர்களும் நேற்று முன்தினம் நீதிமன்ற உத்தரவுப்படி விடுதலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து, விடுவிக்கப்பட்ட அனைவரையும் இலங்கை கடற்படையினர் நேற்று காலை சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கடற்படைக்குச் சொந்தமான அபீட் கப்பல் மூலம் நேற்று மாலை காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர்.

நாகை மாவட்ட மீன்வளத் துறை அலுவலர் சுப்புராஜ் மற்றும் அக்கரைப்பேட்டை மீனவர்கள் துறைமுகத்துக்கு வந்திருந்து, நாடு திரும்பிய மீனவர்களை வரவேற்று சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT