தமிழகம்

துப்புரவு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் செங்கல்பட்டில் குப்பைகளை அகற்றுவதில் தேக்க நிலை: மக்கள் ஒத்துழைப்பதில்லை என நகராட்சி நிர்வாகம் வேதனை

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு நகராட்சியில் சுகாதார அலுவலர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் குப்பை அகற்றும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், நகரவாசிகளும் துப்புரவு பணிகளுக்கு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை என செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம் வேதனை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகளில் 80 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். தினமும் நகரத்துக்குள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் நகரப் பகுதியில் சேகரமாகும் குப்பைகளை அகற்ற 170 துப்புரவு பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், 121 பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு 49 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், துப்புரவு பணியில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை போக்க, 11 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணியை நகராட்சி நிர்வாகம் கடந்த 2014-ம் ஆண்டு தனியார் வசம் ஒப்படைத்தது.

ஆனால், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக தனியார் நிறுவனமும் முறையாக குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபடவில்லை என புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நகராட்சியின் சுகாதார அலுவலர் பணியிடம் கடந்த 8 மாதங்களாக காலியாக உள்ளது. இதனால், துப்புரவு ஆய்வாளர்கள் சரியான திட்டமிடல் இன்றி செயல்பட்டு வருகின்றனர். அதனால், துப்புரவு பணியாளர்கள் எந்த பகுதிக்கு பணிக்கு செல்வ தென்று தெரியாமல், தங்கள் இஷ் டம் போல் பணியில் ஈடுபடுகின்றனர்.

காலியாக உள்ள துப்புரவு பணியிடங்களை நிரப்புவதற்கும், சரியான திட்டமிடலுடன் குப்பை அகற்றும் பணி நடைபெறுவதற்கும் நகராட்சி மண்டல இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கணேசன் கூறியதாவது: நகரத்தின் பல்வேறு பகுதிகளில் 120 குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு சேகரமாகும் 24 மெட்ரிக் டன் குப்பைகளில் 14 மெட்ரிக் டன், காய்கறி கழிவுகள் தான். காய்கறி கழிவு மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில், இத் தகைய குப்பைகளும் முற்றிலும் அகற்றப்படும். தனியார் துப்புரவு பணியாளர்கள், பணிக்கு வராத நாட்களில் பெனால்டி விதித்து, ஒப்பந்ததாரருக்கு வழங்கும் தொகையில் பிடித்தம் செய்கிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக குப் பைகளை அகற்றுவதில் மக்க ளின் ஒத்துழைப்பு அவசியம். குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டி ருந்தாலும், மக்கள் அதில் குப்பை களை கொட்டாமல், அதன் அருகே வீசிச் செல்கின்றனர்.

துப்புரவு பணியில் சிறிது தேக்கம் இருக்கலாம். எனினும், துப்புரவு ஆய்வாளர்கள் மூலம் கண் காணித்து குப்பைகளை அகற்றி வருகிறோம். காலியாக உள்ள சுகாதார அலுவலர் பணியிடத்தை நிரப்புவது குறித்து நகராட்சி மண் டல இயக்குநரகத்துக்கு பரிந் துரைக் கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT