இந்திய உணவுக் கழகத்தை மறுசீரமைப்பு செய்ய அமைக்கப்பட்ட சாந்தகுமார் கமிட்டியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதால், தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படும் அரிசியின் அளவு குறையாது’ என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார். இதை, மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் கனிமொழியின் கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மத்திய உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தனது பதிலில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு ஏற்கனவே அமைத்திருந்த சாந்தகுமார் கமிட்டி இந்திய உணவுக் கழகத்தை மறு சீரமைப்பது பற்றிய தனது பரிந்துரைகளை கடந்த ஜனவரி 21 ஆம் தேதி அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது. அவற்றை பொருத்தமான முறையில் நடைமுறைப்படுத்துவது பற்றி அரசு பரிசீலித்துக்கொண்டிருக்கிறது. அதேசமயம் சாந்தகுமார் கமிட்டியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அளிக்கும் அரிசித் தொகுப்பு குறையாது. எனத் தெரிவித்தார்.
இந்திய உணவு கழகத்தை மறு சீரமைப்பதற்காக மத்திய அரசு அமைத்த சாந்தகுமார் கமிட்டியின் பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதா? அவ்வாறு முடிவெடுத்திருக்கிறது என்றால், இதன் மூலம் மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அளிக்கும் அரிசியின் அளவு குறையுமா? என மாநிலங்களவையில் கழகக் குழுத் தலைவர் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்