காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக் கத்தை அடுத்த முதலியார்குப்பம் பகுதியில், புதிதாக கட்டப்பட்ட கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது.
தமிழக கடலோர மாவட்டங் களில் காஞ்சிபுரமும் ஒன்று. கல்பாக்கம் பகுதியில் அணுமின் நிலையம் அமைந்துள்ளதால், இந்தப் பகுதியில் கடல் வழியாக அச்சுறுத்தல் இருந்து வருகிறது. எனவே, கடற்கரை மற்றும் கடல் வழியான அச்சுறுத்தல்களை தடுப்பதற்காக, கடலோர பாது காப்புக் குழுமத்தின் மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், கடலோர பாதுகாப்பு காவல் நிலையம் இல்லாததால், கடற்கரை பகுதியில் கண் காணிப்புப் பணியில் ஈடுபடுவதில் போலீஸாருக்கு சிரமம் இருந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு கோவளம், முதலியார்குப்பம், சதுரங்கப்பட்டினம் ஆகிய பகுதிகளில் கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக தலா 50 சென்ட் நிலம் மற்றும் காவல் நிலைய கட்டிடம் கட்ட தலா ரூ. 49 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், முதலியார் குப்பம் பகுதியில் கட்டப்பட்ட காவல் நிலையத்தை கடந்த 24-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, காவல் நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த காவல் நிலையத்துக்கு உதவி ஆய்வாளர் சந்திரன் மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாமல்லபுரம் கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளர் வேலு கூறியதாவது:
முதலியார் குப்பத்தில் செயல் பாட்டுக்கு வந்துள்ள கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலை யத்தின் கட்டுப்பாட்டில், கடப் பாக்கம், ஆலம்பரகுப்பம், தழுதாளிகுப்பம், பனையூர் பெரியகுப்பம், சின்ன குப்பம், பரமங்கேணி, பெருந்துறைகுப்பம், புது நடுகுப்பம், பழைய நடுகுப்பம், அங்காளம்மன்குப்பம், ஆலிக்குப்பம், கடலூர் பெரிய மற்றும் சின்ன குப்பம் ஆகிய பகுதிகள் வரும். காவல் நிலையத்துக்கு தற்போது ஊர்காவல் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் மட்டுமே நியமிக்கப் பட்டுள்ளனர். விரைவில், மேலும் 20 காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன்மூலம், கடலோர பகுதியில் உள்ள 13 கிராமங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.