பெருங்குடியில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவனும், பள்ளி மாணவியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை பெருங்குடி அஞ்சுகம் நகர் 9-வது தெருவில் வசிப்பவர் கோபால். இவரது மகள் அனுராதா (17). பிளஸ் 2 தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார். அருகில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் சேர அனுராதா முடிவு செய்திருந்தார். இதற்கு விண்ணப்பம் வாங்குவதற்காக நேற்று முன்தினம் பிற்பகலில் பெருங்குடி அன்னை சத்யா நகரைச் சேர்ந்த, தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் சரவண னுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
விண்ணப்பம் வாங்கிக்கொண்டு இருவரும் வீடு திரும்பிக் கொண்டி ருந்தனர்.
அக்கரை செக்போஸ்ட் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது. சாலையில் விழுந்த சரவணனும், அனுராதாவும் பலத்த காயம் அடைந்தனர்.
அருகே இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் இருவரும் பரிதாபமாக இறந்துவிட்டனர்.
விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கலைமணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளிவர உள்ள நிலையில் மாணவி அனுராதா உயிரிழந்துவிட்டார்.