விஏஓ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்பதை ஆன்லைனில் சரிபார்த்துக்கொள்ள டிஎன்பிஎஸ்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
9.95 லட்சம் விண்ணப்பங்கள்
கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பதவியில் 2,432 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை டிஎன்பிஎஸ்சி ஜூன் 14-ம் தேதி நடத்தவுள்ளது. இந்த தேர்வுக்கு 9.95 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சரியான முறையில் விவரங்களைப் பதிவுசெய்து உரிய விண்ணப்பக் கட்டணம், தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண்ணை குறிப்பிட்டு விண்ணப்பம் பெறப்பட்டதற்கான விவரத்தை சரிபார்த்துக்கொள்ள லாம். சரியான முறையில் விண்ணப் பங்களைப் பதிவு செய்து, உரியவிண்ணப்பக்கட்டணம் செலுத்தி அதன் விவரம் மேற்படி இணைய தளத்தில் இல்லாவிட்டால், அந்த விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான செலான் நகலுடன் கீழ்கண்ட விவரங்களை தேர்வாணையத்தின் இ-மெயில் முகவரிக்கு (contacttnpsc@gmail.com) மே 23-ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
என்னென்ன விவரங்கள்?
விண்ணப்பதாரரின் பெயர், கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான விண்ணப்ப பதிவு எண் (ரிஜிஸ்டேரசன் ஐ.டி) , விண்ணப்பம், தேர்வுக் கட்டணம் (ரூபாய்), கட்டணம் செலுத்திய இடம் (அஞ்சலகம் அல்லது இந்தியன் வங்கி), அதன் முகவரி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
மேற்படி இணையதளத்தில் உள்ள விவரங்கள் விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஓர் ஒப்புகை மட்டுமே. விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்ப தாரர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.