இந்திய கடலில் வெளிநாட்டு கப்பல் கள் மீன் பிடிக்க பரிந்துரை செய்த மீனாகுமாரியின் அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதற்கு தமிழக மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மீன்வளத்தைப் பெருக்கி பொரு ளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் நீலப் புரட்சியை செயல்படுத்துவதற்கு மத்திய மீன்வளத் துறை இணை இயக்குநர் மீனாகுமாரி தலைமையில் 7 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இக்குழு கடந்த ஆகஸ்ட் மாதம் தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது.
இந்த அறிக்கையில், இந்திய ஆழ்கடல் பகுதியான சிறப்புப் பொருளாதார மண்டல பகுதியில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள், மீன்பிடி படகுகள் மீன் பிடிக்கலாம். ஆனால், இந்திய மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் 15 மீட்டர் நீளம் உள்ள படகுகளில் மட்டுமே மீன் பிடிக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை வரையறுத்திருந்தது.
மீனாகுமாரியின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மற்றும் புதுவை மாநில மீனவர்கள் கடந்த 6 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 3-ம் தேதி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மீனாகுமாரியின் அறிக்கைகள் உள்ளன. முறையாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்படவில்லை. அதை ஏற்று எந்த வழிகாட்டுதலையும் மத்திய அரசு கொண்டு வரக்கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மீனாகுமாரி அறிக்கையின் பரிந்துரைகளை நிராகரித்துள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு அனுமதி அளித்ததாக வெளியான தகவல் உண்மை இல்லை, இந்திய கடல் பகுதியில் வெளிநாட்டு கப்பல் மீன் பிடித்தால் சட்டவிரோதம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் முந்தைய காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்டதுதான் மீனாகுமாரி குழு எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மீனவர்கள் வரவேற்பு
இந் நிலையில் ராமேசுவரத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.ஆர். செந்தில்வேல் கூறியதாவது:
மீனாகுமாரியின் அறிக்கையை மத்திய அரசு நிராகரித்ததை வரவேற்கிறோம். தமிழக மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க ஏற்கெனவே தகுதி படைத்தவர்கள். கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூரில் மீனவர்கள் மட்டும் ஆழ்கடல் பகுதியில் எவ்வித நவீன உபகரணங்கள் இன்றி ஆண்டுக்கு 45 ஆயிரம் டன் மீன்களை பிடித்து வருகின்றனர். நமது மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு உரிய அடிப்படை வசதிகளையும், ஊக்கங்களையும் கொடுத்தால் ஆழ்கடல் பகுதியில் மேலும் அதிகமான மீன்களை பிடிக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.