தமிழகம்

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்: மத்திய குழு தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளர் தாரித்ரி பாண்டா தலைமையிலான குழுவினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத் துவமனை அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக 5 பேர் கொண்ட மத்திய குழுவினர் கடந்த 22-ம் தேதி தமிழகம் வந்தனர். மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளர் தாரித்ரி பாண்டா தலைமையில், ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் ஜெ.பால சந்தர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை கட்டிடக்கலை வல்லுநர் சச்சின் மகேந்துரு, மத்திய அரசின் சார்பு செயலாளர் எல். சந்திரசேகரன் ஆகியோரைக் கொண்ட இக்குழுவினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பெருந் துறை, தோப்பூர், புதுக்கோட்டை, செங்கிப்பட்டி, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தேர்வு செய் யப்பட்டுள்ள 200 ஏக்கர் இடத்தை பார்வையிட்டனர். அதன்பின் நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக நேற்று காலை மத்திய குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய் தோம். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் களின் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளோம். தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனையை அமைக்கவுள்ளோம் என்பதை விரைவில் அறிவிப்போம். எங்களுடைய முதல் கட்ட ஆய்வு அறிக்கையை 2 வாரங்களில் மத்திய அரசிடம் கொடுத்துவிடுவோம்.

இதைத் தொடர்ந்து இன்னும் 4 முதல் 6 மாதங்களில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கப்படும். மத்திய அரசின் நிதியில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான 200 ஏக்கர் இடத்தை மாநில அரசு இலவசமாக கொடுக்கிறது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ரூ.1,500 கோடி முதல் ரூ.1,800 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்

தமிழக சுகாதாரத்துறை செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “அதிமுக பொதுச்செயலாள ரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் முயற்சி யால் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான 5 இடங்கள் தேர்வு செய்து அனுப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய குழுவினர் தமிழகம் வந்து 5 இடங்களையும் பார்வையிட்டுள்ளனர். மத்திய குழுவினர் கேட்டுள்ள கூடுதல் தகவல்களை ஒரு வாரத்தில் கொடுத்து விடுவோம். அதன்பின் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப் பதற்கான பணிகள் தொடங்குவது குறித்த முடிவை மத்திய அரசு எடுக்கும்” என்றார்.

பேட்டியின் போது மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் கீதாலட்சுமி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.விமலா, கிங் இன்ஸ்டிடியூட் இயக்குநர் குணசேகரன், பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் மோகன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT