தமிழகம்

17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள தையூர் வீட்டுமனை திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை

செய்திப்பிரிவு

17 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள தையூர் வீட்டுமனை திட்டத்தை விரைந்து நிறைவேற்றக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் நந்தனத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகம் அருகே நேற்று போராட்டம் நடத்தினர். இதில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தித் தர பல்லவன் போக்குவரத்துக்கழக கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் உருவாக்கப்பட்டு, வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

கடந்த 1997-ம் ஆண்டு இக்கூட்டுறவு சங்கத்தின் மூலம் 1,357 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். உறுப்பினர்களுக்காக தையூர் எல்லையில் 87.89 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. 1,200 சதுர அடிக்கு ரூ.15 ஆயிரம், 1,800 சதுர அடிக்கு ரூ.22 ஆயிரத்து 500 என்ற அடிப்படையில் பணம் வசூலிக்கப்பட்டது.

ஆனால், இதுவரையில் வீட்டுமனைகள் பிரிந்து வழங்கப்படவில்லை. இந்நிலையில், 17 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள தையூர் வீட்டு மனை திட்டத்தை விரைந்து நிறைவேற்றக்கோரி மாநகர போக்குவரத்துக் கழக ஹவுசிங் சொசைட்டி நலச் சங்கம் சார்பில் நந்தனத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகம் அருகே உறுப்பினர்கள் குடும்பத்துடன் நேற்று பெருந்திரள் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர். இதில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘தையூர் வீட்டுமனை திட்டத்தில் மொத்தம் 1,357 பேர் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். வீட்டுமனைகளுக்கு உறுப்பினர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டது. இதுவரையில் 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இறந்துள்ளனர்.

பணியிலிருந்த தொழிலாளர்களில் 700-க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுவிட்டனர். ஆனால், இதுவரையில் மனை வழங்கப்ப டவில்லை. எனவே, இத்திட்டதை விரைந்து நிறைவேற்றக்கோரி, வீட்டுவசதி வாரிய பதிவாளரிடம் மனு அளித்துள்ளோம். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்’’ என்றார்.

SCROLL FOR NEXT