வியட்நாம் செல்வதற்கான விசா விண்ணப்ப மையத்தை இந்தியாவுக்கான வியட்நாம் தூதர் டான் சின் தான் சென்னையில் நேற்று திறந்து வைத்தார்.
வியட்நாம் செல்வதற்கான புதிய விசா விண்ணப்ப மையம் சென்னை எத்திராஜ் சாலையில் நேற்று திறக்கப்பட்டது. இந்த மையத்தின் திறப்பு விழாவில் இந்தியாவுக்கான வியட்நாம் தூதர் டான் சின் தான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் புதிய விசா மையம் குறித்து அவர் கூறியதாவது:
இந்தியர்களின் வசதிக்காக புதிய விசா மையங்களை திறப்பதற்கு 2015-ம் ஆண்டில் முன்னுரிமை கொடுக்கவுள்ளோம். இதன்படி ஹைதராபாத்தில் நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 27) புதிய விசா மையத்தை திறந்தோம். இதையடுத்து, சென்னையிலும் விசா விண்ணப்ப மையத்தை திறந்துள்ளோம். ஏற்கெனவே கொல்கத்தாவில் வியட்நாமுக்கான விசா விண்ணப்ப மையம் இயங்கி வருகிறது. இந்தியாவிலிருந்து வியட்நாம் செல்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டில் 18 ஆயிரம் பேர் இந்தியாவிலிருந்து வியட்நாம் சென்றனர். கடந்த ஆண்டில் சுமார் 55 ஆயிரம் பேர் வியட்நாம் சென்றனர். சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய விசா மையம் பெரும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மையத்தில் விசாவுக்காக விண்ணப்பித்தால் அதை டெல்லியில் உள்ள வியட்நாம் தூதரகம் பரிசீலித்து விசா வழங்கும். இதற்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும்.
சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள ஃபாகுன் டவர்ஸின் 2-வது தளத்தில் உள்ளது. இந்த மையம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை இயங்கும். மேலும் விவரங் களுக்கு www.vfsglobal.com/Vietnam/India என்ற இணைய தளத்துக்கு செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.