கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டை நிறைவேற்றாத அதிமுக அரசை விட மக்கள் விரோத அரசு வேறு எதுவும் இருக்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த மத்திய காங்கிரஸ் அரசு 6 முதல் 14 வயது நிரம்பிய அனைவருக்கும் கட்டாய கல்வி கொடுக்கும் வகையில் கல்வி உரிமைச்சட்டம் கொண்டு வந்தது.
இச்சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளும் ஒவ்வொரு வகுப்பிலும் 25% இடங்களில் ஏழைஎளிய மாணவர்களை சேர்க்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. இதற்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் முறையான மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதில்லை. அதை தட்டிக் கேட்பதற்கு கல்வித்துறையும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இச்சட்டத்தின்படி தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளாமல், தனியார் பள்ளிகள் பல்வேறு சால்ஜாப்புகளை கூறி இழுத்தடித்து வருகின்றன.
இதனால் பெற்றோர்கள் எதிர்கொள்கிற வேதனைகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது. இதுகுறித்து தமிழக அரசு கடுகளவும் கவலைப்படுவதாக தெரியவில்லை. மத்திய கல்வி சட்டத்தின்படி 25 சதவீத ஒதுக்கீட்டை நிறைவேற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதிலே தமிழக கல்வித்துறைக்கு என்ன தயக்கம் ? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?
கடந்த 2013-14 கல்வியாண்டில் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி தமிழகத்தில் மொத்த இடங்கள் 1 லட்சத்து 43 ஆயிரம். ஆனால் 16 ஆயிரத்து 194 இடங்கள் தான் நிரப்பப்பட்டிருக்கின்றன. 25 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டிய தனியார் பள்ளிகள் 8.8 சதவீதம் தான் ஒதுக்கியிருக்கின்றன. இது மத்தியபிரதேச மாநிலத்தில் 89 சதவீதமாகவும், ராஜஸ்தான் மாநிலத்தில் 69 சதவீதமாகவும், கர்நாடகாவில் 25 சதவீதமாகவும் உள்ளன.
தமிழகத்திலுள்ள 10 ஆயிரத்து 758 தனியார் பள்ளிகளில் 1392 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவரைத் தான் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி சேர்த்துள்ள கொடுமை நடந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தான் இவ்வளவு குறைவான மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
இச்சட்டப்படி பள்ளிகளுக்கு சேர வேண்டிய முழுக் கட்டணத்தை மத்திய அரசுதான் வழங்குகிறது. இந்நிலையில் இச்சட்டத்தின்படி ஒதுக்கீட்டை நிறைவேற்றாத அ.தி.மு.க. அரசை விட மக்கள் விரோத அரசு வேறு எதுவும் இருக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.