தீண்டாமை கடைபிடிக்காமல் நல்லிணக்கத்துடன் செயல்பட்ட வரகூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். அந்த கூட்டத்தில் சாலை, குடிநீர், இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு 489 மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்.
தொடர்ந்து தீண்டாமை கடைபிடிக்காமல் நல்லிணக்கத்துடன் வாழும் ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்ட நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வரகூர் ஊராட்சிக்கு ரூ. 10 லட்சம் காசோலை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதன்படி மொத்தம் 44 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் வே.ரா.சுப்புலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் எஸ். சூரிய பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.