திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் (93), வயது முதிர்வால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இதனால், கட்சியின் முக்கிய மான நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை 10 மணி அளவில் அவருக்கு திடீரென தலைசுற்றல் காரணமாக மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்று அன்பழகனைப் பார்த்து நலம் விசாரித்தனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.
தனி வார்டில் அனுமதிக் கப்பட்டுள்ள அன்பழகனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விடுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.