உலக புத்தக தினத்தையொட்டி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் ‘சென்னை புத்தகச் சங்கமம்’ என்ற பெயரிலான புத்தகக் காட்சி நேற்று தொடங்கியது. இதை தென்னிந்தியாவுக்கான மலேசிய தூதர் சித்ராதேவி ராமய்யா தொடங்கிவைத்து பேசியதாவது:
புத்தகங்கள் வாசிப்பதுதான் மனிதர்களின் அறிவு வளர்ச்சி யைத் தூண்டும். புத்தகம் படிப்பது மிகவும் நல்ல பழக்கம். பொழுதுபோகவில்லை என்பதற் காக அல்லாமல், தொடர்ச்சியாக நூல்களைப் படிக்க வேண்டும். தமிழகத்தில் ஆண்டுதோறும் இதுபோன்ற புத்தகக் காட்சிகள் நடப்பது பாராட்டுக்குரியது. மலேசியாவிலும் மக்கள் புத்தகம் படிப்பதைத் தூண்டும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
குழந்தைகள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் புத்தகம் படிக்க வேண்டும். குறிப்பாக, வீட்டில் இருக்கும் பெண்கள் வெளி உலகை தெரிந்துகொள்ள புத்தகங்கள் பெரிதும் உதவுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
வரியியல் அறிஞர் ச.ராசரத் தினம், மத்திய செம்மொழித் தமிழாய்வு மைய பதிவாளர் முனைவர் முத்துவேல், வழக்கறிஞர் சம்பத், பதிப்பாளர்கள் புகழேந்தி, ஒளிவண்ணன், க.ஜெய கிருஷ் ணன், தி.வேணுகோபால் கலந்து கொண்டனர்.
‘சென்னை புத்தகச் சங்கமம்’ புத்தகக் காட்சி வரும் 23-ம் தேதி வரை நடக்கிறது. தினமும் பகல் 2 மணி முதல் இரவு 9 மணிவரை நடக்கும். 14,18,19 ஆகிய நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். தினமும் மாலையில் அறிஞர்கள் பங்கேற்கும் இலக்கிய சொற்பொழிவுகள் நடக்கின்றன. 200க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. நூல்களுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.