இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 54 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து ஊர்காவல்துறை, மன்னார் நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.
முன்னதாக நேற்று, இந்திய- இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தையை முன்னிட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 54 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய அந்நாட்டு அரசு பரிந்துரைத்தது.
இலங்கை கடற்படையினர் கடந்த சனிக்கிழமை இரவு தமிழக மீனவர்கள் 54 பேரை அவர்களது 10 விசைப்படகுகளுடன் சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.
சென்னையில் இன்று இந்திய - இலங்கை மீனவர்களிடையே 3-வது கட்டப் பேச்சு வார்த்தை நடைபெறுவதால் அனுராதபுரம், யாழ்ப்பாணம் சிறைகளில் உள்ள 54 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு பரிந்துரை செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மீனவர்கள் இன்று (மார்ச் 24) மன்னார் மற்றும் ஊர்காவல்துறை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
மீனவர்கள் அனைவரும் நாளை இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.