தமிழகம்

புதுச்சேரி - பெங்களூரு விமான சேவை ஏப்.14-ல் தொடங்கும்

செய்திப்பிரிவு

புதுச்சேரி - பெங்களூருக்கான விமான சேவை வரும் ஏப்ரல் 14ம் தேதி அன்று மீண்டும் தொடங்கப்பட உள்ளது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் லாஸ்பேட்டையில் விமானநிலையம் அமைந்துள்ளது. தொடக்கத்தில் சிறிய ரக டோர்னியர் விமானங்கள் இங்கு இயக்கப்பட்டன. பெரிய விமானங்களை இயக்குவதற்காக, கடந்த 2013 ஜனவரியில் புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டது.

புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்ட உடன் 2013 ஜனவரி 17ம் தேதி ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கப்பட்டன. புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. பயணிகள் எண்ணிக்கை குறைவால் ஏற்பட்ட தொடர் நஷ்டத்தால் விமான சேவை 2014ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி நிறுத்தப்பட்டது.

பெரிய வகை விமானங்களை இயக்க வசதியாக கட்டப்பட்ட புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்ட ஓராண்டுக்குள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 2014 பிப்ரவரி 1ம் தேதி முதல் புதுச்சேரி விமான நிலையம் முழுமையாக விமான சேவையின்றி மூடிக் கிடந்தது. இந்நிலையில் 14 மாதங்களுக்குப் பிறகு புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் கிளை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிர்வாகம் புதுவை மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் மீண்டும் போக்குவரத்து சேவையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமியுடன், அலையன்ஸ் ஏர் நிறுவன சிறப்பு அலுவலர் அனில் மேத்தா, உதவிப் பொதுமேலாளர் ஆர்.பிரபாகரன், மேலாளர்கள் வின்சென்ட் பல்லா, பி.ஆர்.விஜயராகவன் ஆகியோர் பேச்சு நடத்தினர்.

சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு, செயலர் மிஹிர் வரதன், இயக்குநர் முனிசாமி, புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ஆர்.வெங்கடாசலபதி ஆகியோர் உடனிருந்தனர்.

இதில் புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு வாரத்துக்கு 6 நாள்கள் அலையன்ஸ் ஏர் விமானத்தை இயக்க தீர்மானிக்கப்பட்டது.

இதுகுறித்து முதல்வர் ரங்கசாமி இன்று கூறியதாவது:

புதன்கிழமை தவிர வாரத்துக்கு 6 நாள்கள் 48 இருக்கைகள் வசதி கொண்ட சிறிய ரக விமானம் இயக்கப்படும். பெங்களுரூவில் இருந்து நாள்தோறும் மாலை 3.45 புறப்படு்ம் விமானம் புதுவைக்கு மாலை 4.45 வரும், மீண்டும் புதுவையில் இருந்து 5.05 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.05 மணிக்கு பெங்களூருக்கு செல்லும்.

அங்கிருந்து புதுடெல்லி, மும்பை, கொச்சி, ஐதராபாத், கொல்கத்தா நகரங்களுக்கு பொதுமக்கள் பயணிக்கலாம். ஏற்கெனவே விமான எரிபொருளுக்கு 1 சதவீதம் வரியை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியிலேயே விமான எரிபொருள் நிரப்பும் வசதியை ஏற்படுத்துவது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் பேசி உள்ளோம். வரும் ஏப்ரல் 14ம் தேதி சேவை தொடங்குகிறது என்று தெரிவித்தார்.

          
SCROLL FOR NEXT