கூடுவாஞ்சேரி அருகே, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம்(58), சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீனியர் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மகன் தேவேந்திரன்(26), இவர்கள், ஈரோடு மாவட்டம், உலகபுரம் பகுதியைச் சேர்ந்த கலாவதி மற்றும் அவருடைய நண்பர் ராஜேந்திரன் ஆகியோரிடம் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.8 லட்சத்தை பெற்றுள்ளனர். ஆனால், ரயில்வேயில் வேலை வாங்கித் தராமல் இருவரும் இழுக்கடித்ததாக கூறப்படுகி றது.
இதையடுத்து, கலாவதி தொடர்ந்து வேலை குறித்து கேட்டு வந்ததால், ரயில்வே துறை பணி ஆணையைப் போலவே போலியான ஆவணங்களைத் தயாரித்து நித்யானந்தம் கலாவதியிடம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த கலாவதி மற்றும் ராஜேந்திரன் கூடுவாஞ்சேரி போலீஸில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், நித்தியானந்தம் மற்றும் தேவேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இந்தப் புகார் தொடர்பாக தலைமறைவான இன்னொரு நபரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.