காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், மதுராந்தகம், அச்சிறுபாக்கம், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்களில் புதுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளை முன்னேற்றும் நோக்கில், அவர்களுக்கு வாழ்வாதார உதவிகள், உதவி உபகரணங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மாநில மற்றும் தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் அவர்களை பங்கேற்க செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில், காஞ்சிபுரம் மாவட்ட புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளான உத்திரமேரூர் ஒன்றியம் அன்னாத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த மீனா, திருவானைகோவில் ஊராட்சியைச் சேர்ந்த சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், 100 மீ. ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் தங்கப் பதக்கமும், 200 மீ. ஓட்டத் தில் வெள்ளிப் பதக்கமும் வென்றார் மீனா. அதேபோல, ஆடவர் 100 மீ. ஓட்டத்தில் சண்முகம் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இவர்கள் இருவரும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகத்தை அண்மையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். புதுவாழ்வுத் திட்ட மாவட்டத் திட்ட மேலாளர் பி. தனசேகர் உடனிருந்தார்.